இந்தியாவின் பஞ்சாப் மற்றும் ஆந்திர மாநிலங்களில் கள்ளச்சாராயம் மற்றும் அல்கஹோல் அடங்கிய சனிடைசரைக் குடித்த 48 போ் உயிரிழந்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை வரையான நிலவரப்படி பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸின் ஊரக பகுதிகளில் 10 பேரும் படாலாவில் 09 பேரும் தர்ன் தரனில் 19 பேரும் கள்ளச்சாராயம் குடித்து இறந்தனர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கள்ளச் சாராய விநியோகம் நடந்துள்ளதால் அதனைக் குடித்தவா்களின் இறப்பு மேலும் அதிகரிக்கலாம் என பஞ்சாப் பொலிஸ் ஆணையாளா் டிங்கர் குப்தா தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளச்சாராய விநியோகம் தொடா்பில் இதுவரை எட்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, ஆந்திர மாநிலத்தில் அல்கஹோல் அடங்கிய சனிடைசரை போதைக்காகக் குடித்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரகாசம் மாவட்டத்தில் உள்ள குரிடேடு கிராமத்தில் நான்கு நாட்களுக்கு முன் இந்தப் பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் போதைக்காக அல்கஹோல் அடங்கிய சனிடைசரை குடித்தவா்களே உயிரிழந்ததாக மாநில சிரேஷ்ட் பொலிஸ் அதிகாரி சித்தார்த் கெளஷல் தெரிவித்துள்ளார்.