கேரளா - கோழிக்கோடு விமான நிலையத்தில் நேற்றிரவு இடம்பெற்ற விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 20 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
டுபாயிலிருந்து கேரளா கோழிக்கோடு விமான நிலையத்திற்கு 191 பேருடன் நேற்று இரவு வந்த ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளாகி இரண்டு துண்டுகளாக உடைந்தது.
கொரோனா பொது முடக்கம் காரணமாக டுபாயில் சிக்கியிருந்தவர்களை வந்தே பாரத் திட்டத்தின் மூலம் கேரளா அழைத்து வந்த விமானமே விபத்தில் சிக்கியது.
கேரள மாநில சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜா கோழிக்கோட்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்துக்குள்ளான சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்ததாக நேற்றிரவு 11 மணிக்கு தெரிவித்தார். காயமடைந்தவர்கள் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மற்றும் அருகிலுள்ள பிற மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அனுமதிக்கப்பட்டவர்களுக்கு பலத்த காயங்கள் உள்ளன என்றும் அவர் கூறினார்.
அதிகாலை 2 மணியளவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17 என குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளதாகவும், மேலும் 20 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.