தெற்கு சீனாவில் யாங்சே ஆற்றில் இருந்து பாயும் நீரால் ஏற்பட்ட வெள்ளத்தால் சிச்சுவான் மாகாணத்தில் யுனெஸ்கோவின் பாரம்பரிய தளமான 233 அடி பிரம்மாண்ட புத்தர் சிற்பத்தின் பாதம் வரை வெள்ளம் உயர்ந்துள்ளது.
பல தசாப்தங்களில் பின்னர் இவ்வாறான பாரிய வெள்ளப்பெருக்கு இந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு தென் சீனப் பிராந்தியத்தின் பெரும்பகுதியை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து யாங்சே ஆற்றைச் சுற்றியுள்ள இலட்சக்கணக்கான குடியிருப்பாளர்களை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ள அதிகாரிகள், அந்தப் பகுதியில் சிவப்பு ஆபத்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளத்தால் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள 233 அடி பிரம்மாண்ட புத்தர் சிற்பம் பாதம் வரை வெள்ளம் உயர்ந்துள்ள சம்பவம் 70 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்துள்ளதாக சீன அரசின் செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.
233 அடி உயரத்தில் அமர்ந்திருக்கும் புத்தர் சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு எமெய் மலையில் உள்ள ஒரு மலையடிவாரத்தில் செதுக்கப்பட்டது.
இது சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தின் ஒரு பகுதியாகும்.
இந்தச் சிலையை வழக்கமாக யாங்சி ஆற்று நீர் எட்டுவதில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் வழக்கமாக இந்த பிரமாண்ட புத்தர் சிற்பம் அமைந்துள்ள மலையடிவாரத்தின் கீழ் கூடுவது வழமை
இந்நிலையில் நீர் வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து இந்த பகுதி திங்களன்று மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த வார இறுதியில் இது மீண்டும் திறக்கப்படும் என்று அதிகாரிகள் நம்பி்க்கை வெளியிட்டுள்ளனர்.