இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிய இருவர் உயிரிழந்துள்ளனர். 80-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
நேற்றிரவு இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளுக்குள் இன்னமும் 19 போ் சிக்கத் தவித்து வருவதாக மாநில அமைச்சர் அதிதி தாட்கரே இன்று முற்பகல் செய்தியாளா்களிடம் தெரிவித்துள்ளார்.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் ரெய்காட் மாவட்டத்தில் உள்ள கஜல்புரா பகுதியில் 5 மாடி கட்டிடமே நேற்று இரவு 7 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது.
தரைத்தளம் மற்றும் 4 மாடிகள் அடங்கிய இந்த கட்டிடத்தில் மொத்தம் 45 குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில நாட்களாகவே இங்கு கனமழை பெய்து வந்த நிலையில், இந்த விபத்து நேர்ந்துள்ளதாக மாநில அமைச்சர் அதிதி தாட்கரே தெரிவித்தார்.
மும்பையில் இருந்து சுமார் 4 மணி நேர பயண தூரத்தில் இருக்கும் இந்த பகுதிக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 3 குழுவினர் விரைந்துள்ளனர். மீட்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான அனைத்து விதமான கருவிகள், மோப்ப நாய்கள் மற்றும் தளபாடங்களுடன் அவர்கள் சென்றுள்ளனர்.
கட்டடம் இடிந்து விழுந்ததை அடுத்து தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த வீரர்கள் துரிதமாக செயல்பட்டு குழந்தைகள் மற்றும் பெண்கள் என 80 பேரை இடிபாடுகளுக்குள் இருந்து இதுவரை உயிருடன் மீட்டனர்.
நேற்று இரவு தொடங்கி தற்போது வரை மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.