பிரான்ஸில் நவம்பா் -27, மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு முன்னெடுத்துவருகிறது.
உலகெங்கும் ஏற்பட்டிருக்கும் கோவிட் 19 என்னும் கொடிய வைரசினால் துன்பத்திற்கு உள்ளாகிவருகின்ற நிலையில், இந்தக் கொடிய வைரசில் எம்மைப் பாதுகாத்து நாட்டின் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்து மாவீரர் நாள் 2020 நினைவேந்தல் இம்முறை நடாத்தப்படவுள்ளதாக பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது.
வழமைபோன்று குறித்த நிகழ்வுகள் மக்களின் பங்களிப்பின் மூலமே நடாத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்காக மாவீரர் பங்களிப்பு அட்டைகளை கட்டமைப்புப் பொறுப்பாளர்கள் பெற்றுக்கொள்ளும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை காலை பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஈகைச்சுடரை மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவரும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளருமான மகேஸ், மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவரும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுச் செயற்பாட்டாளருமான சுரேஸ் ஆகியோர் ஏற்றிவைத்தனர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து மாவீரர் பங்களிப்பு அட்டையை முதலில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப்பொறுப்பாளர் பாலசுந்தரத்திடம் இருந்து தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் ஜெயக்குமார் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து ஏனைய கட்டமைப்புப் பொறுப்பாளர்கள் பங்களிப்பு அட்டையைப் பெற்றுக்கொண்டனர்.