பிரான்ஸில் நேற்று வியாழக்கிழமை 10,593 புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரெஞ்சு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொற்று நோய் தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவு மிக அதிகபட்ச தொற்று நோயாளர் தொகையாக இது உள்ளது.
கடந்த செப்டம்பர் 12-ஆம் திகதி 10,561 புதிய தொற்று நோயாளர்கள் பதிவானதே பிரான்ஸில் ஒரு நாளில் பதிவான அதிகபட்ச தொற்று நோயாளர் தொகையாக இருந்தது.
இந்நிலையில் நேற்று இதனை விட அதிக தொற்று நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட 50 பேர் நேற்று உயிரிழந்ததாகவும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
கோவிட்-19 சோதனைகளை இலவசமாக்குவதற்கான அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து அங்கு சோதனைகள் அதிகரிதுள்ளதுடன், தொற்று நோயாளர் தொகையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த ஏழு நாட்களில் நாளொன்றுக்கு சராசரியாக 8,800 என்ற அடிப்படையில் தொற்று நோயாளர்கள் தொகை பதிவாகியுள்ளதாகவும் பிரெஞ்சு சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
இதேவேளை, பிரான்ஸில் நேற்று பதிவான புதிய தொற்று நோயாளர்களுடன் அங்கு பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 415,481 –ஆக உயர்ந்துள்ளது.
நேற்று பதிவான 50 இறப்புக்களுடன் மொத்த கொரோனா மரணங்கள் 31,095 ஆக அதிகரித்துள்ளன.
கொரோனா சோதனையை இலவசமாக்குவதற்கான அரசாங்கத்தின் அறிவிப்பை அடுத்து பல நகரங்களில் உள்ள சோதனை மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் கொரோனா தொற்று சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரான்ஸில் பரவிய தொற்று நோயின் முதல் அலையின்போது மேற்கொள்ளப்பட்டதை விட தற்போது சோதனைகள் சுமார் 6 மடங்கு அதிகரித்துள்ளன.
கடந்த வாரம் சுமார் 12 இலட்சம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக பிரெஞ்வு சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
ஒட்டுமொத்த சோதனைகளில் 5.4 வீதமானவைற்றில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.