ஐபிஎல்-2020 கிரிக்கெட் தொடரின் 2வது போட்டியில் விளையாடிய பஞ்சாப் அணி சூப்பர் ஓவரில் சுருண்டதால் டெல்லி கப்பிடல்ஸ் அணி முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஐபிஎல் 2020 சீசனின் 2-வது ஆட்டம் துபாயில் நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் டெல்லி கப்பிட்டல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நாணயச்சுழற்சியில் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி டெல்லி கப்பிட்டல்ஸ் அணி களமிறங்கியது. முன்னணி வீரர்களான பிரித்வி ஷா, ஷிகர் தவான், சிம்ரோன் ஹெட்மையர் ஆகியோர் பஞ்சாப் அணி வீரர்களின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் விரைவில் ஆட்டமிழந்து வெளியேறினர். 4-வது விக்கெட்டுக்கு டெல்லி அணித்தலைவர் ஷ்ரேயாஸ் அய்யர் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. அதேசமயம் அடிக்கக்கூடிய பந்தை அடித்து விளையாடியது. ரிஷப் பண்ட் 31 ஓட்டங்களிலும், ஷ்ரேயாஸ் அய்யர் 39 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதி கட்டத்தில் சகலதுறை ஆட்டக்காரர் ஸ்டாய்னிஸ் அதிரடி காட்டினார். அவர் 20 பந்தில் 7 நான்கு ஓட்டங்கள், 3 ஆறு ஓட்டங்களுடன் அரைசதம் கடந்தார். ஸ்டாய்னிஸ் 21 பந்தில் 53 ஓட்டங்களை குவித்து டெல்லி அணி கௌரவமான இலக்கை எட்ட உதவியிருந்தார்.
இறுதியில், டெல்லி கப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்தது.
பஞ்சாப் அணி சார்பில் முகமது ஷமி 4 ஓவரில் 15 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், காட்ரெல் 24 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், ரவி பிஷ்னோய் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்களும் டெல்லி அணி வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் வெளியேறினர். இதனால் அந்த அணி 55 ஓட்டங்களை எடுப்பதற்கு முன்னதாக 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது..
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் தனியாக போராடினார். கிடைத்த பந்துகளை பவுண்டரி, சிக்சராக பறக்கவிட்டார். அவர் இறுதி வரை போராடினார். அகர்வால் 60 பந்தில் 89 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது.
இதையடுத்து, சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி 2 விக்கெட்டுக்களை இழந்து 2 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. டெல்லி வீரர் ரபாடா சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து ஆடிய டெல்லி கப்பிட்டல்ஸ் அணி 3 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா