மலேசியாவில் பிரதமர் மொகிதீன் யாசின் ஆட்சி கவிழ்ந்து விட்டது என்றும் தமக்குப் பெரும்பான்மை எம்.பிக்களின் ஆதரவு உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று பகிரங்கமாக அறிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் இதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ள ஆளும் தரப்பினர் தம்மிடம் போதிய பெரும்பான்மை உள்ளதாகவும் ஆட்சி மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் கூறியுள்ளனர்.
இன்று மதியம் திடீரென செய்தியாளர்களைச் சந்தித்த மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை எம்.பிக்கள் தம்மிடம் இருப்பதாக கூறினார்.
இதனை உறுதிப்படுத்தி ஆட்சி அமைக்க உரிமை கோரும் வகையில் மலேசிய மாமன்னருடனான சந்திப்புக்கு அனுமதி கோரியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தமக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் மலாய் இஸ்லாமியர்கள் என்று குறிப்பிட்ட அன்வார், நடப்புப் பிரதமர் மொகிதீன் யாசின் தலைமையிலான அரசு இன்றோடு முடிவக்கு வந்துவிட்டது என்றார்.
அன்வார் தலைமையிலான பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் அப்போதைய பிரதமர் நஜீப் தலைமையிலான அரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தது. பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி சார்பில் மகாதீர் மொஹம்மத் பிரதமரானார். அச்சமயம் சிறையில் இருந்த அன்வார் இப்ராஹிம் பின்னர் விடுதலையானார்.
இரண்டாண்டுகள் நீடித்த அந்த ஆட்சி இந்தாண்டு பெப்ரவரி மாத இறுதியில் கூட்டணிக் குழப்பங்களால் கவிழ்ந்தது. அன்வார் தலைமையிலான பிகே.ஆர். கட்சியைச் சேர்ந்த அஸ்மின் அலியின் தலைமையில் சில எம்.பிக்கள் அணி மாறியதை அடுத்து மகாதீர் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது.
பின்னர் திடீர்த் திருப்பமாக தற்போதைய பிரதமர் மொகிதீன் யாசின் தலைமையிலான புதிய ஆட்சி அமைந்தது. மகாதீர் தலைமையிலான அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராக இருந்தவர் யாசின். எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அவர் ஆட்சியமைத்தார். எனினும் அவரது அரசுக்கு நாடாளுமன்றத்தில் போதுமான பெரும்பான்மை இல்லை என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து எந்நேரத்திலும் மொகிதீன் யாசின் தலைமையிலான ஆட்சி கவிழக்கூடும் என்ற பரபரப்பு நிலவி வந்த நிலையில் எதிர்க்கட்சியான அன்வார் தரப்பு தம்மிடம் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை எம்.பிக்களின் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
எனினும் எந்தனை எம்.பிக்கள் உள்ளனர் என்பது போன்ற உறுதியான தகவல்களை அவா் வெளியிடவில்லை.