பிரான்ஸில் கடந்த ஒரு வாரமாக தினசரி புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் எண்ணிக்கை சராசரியாக 10 ஆயிரம் என்ற அளவில் பதிவாகிவரும் நிலையில் சிவப்பு மண்டலமாக அடையாளப்படுத்தப்பட்ட ஆபத்தான பகுதிகளில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் என பிரெஞ்சு சுகாதார அமைச்சர் ஒலிவர் வேரன் தெரிவித்துள்ளார்.
தொற்று நோய் தொடர்ந்து கூர்மையாக அதிகரித்து வருகிறது. நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. நாங்கள் விரைவாக நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், சில பிராந்தியங்களில் நிலைமை கைமீறிச் சென்றுவிடும் என அமைச்சர் வேரன் செய்தியாளர்களிடம் கூறினார்.
பிரான்ஸில் கடந்த ஒரு வாரத்தில் ஒரு இலட்சம் தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொற்று நோய் விரைவாகப் பரவும் பகுதிகள் சிவப்பு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆபத்தான பகுதிகளில் திருமணம் மற்றும் பிற நிகழ்வுகளில் சிறிய குழுக்களாகவே மக்கள் ஒன்றுகூட வேண்டும். 30 பேருக்கு மேல் ஒன்று கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சா் கேட்டுக்கொண்டார்.
ஆபத்தான பிராந்தியங்களாகக் கருதப்படும் பாரிஸ் மற்றும் பிற எட்டு நகரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை முதல் இரவு 10 மணிக்கு பார்கள் மூடப்படும், பொது நிகழ்வுகளுக்கு வருகை வரம்பு 5 ஆயிரத்தில் இருந்து ஆயி்ரமாகக் குறைக்கப்படும். கடற்கரைகள் மற்றும் பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் 10-க்கும் மேற்பட்டோர் கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
மார்சேய் மற்றும் குவாடலூப்பில் 100,000 பேருக்கு 250-க்கும் மேற்பட்டவர்கள் என்ற அடிப்படையில் தொற்று நோய் அதிகரித்துள்ளதால் இந்தப் பிராந்தியங்களில் பார்கள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் என்றும் அமைச்சர் ஒலிவர் வேரன் அறிவித்தார்.
பிரான்ஸில் கடந்த மார்ச் மாதம் தொற்று நோய் பரவல் அதிகரித்த நிலையில் சுகாதார அவசர நிலையை பிரான்ஸ் அரசு அறிவித்தது. அத்துடன், தேசிய அளவில் இரண்டு மாதங்கள் ஊரடங்கு, சமூக முடக்கல் கட்டுப்பாடுகள் அமுல் செய்யப்பட்டன.
இந்நிலையில் மீண்டும் ஒரு சமூக முடக்கலைத் தவிர்க்கும் நோக்கிலேயே கட்டுப்பாடுகளை நாங்கள் அமுல்படுத்தி வருகிறோம். மீண்டும் சிறை வாசத்தை ஒத்த ஒரு சமூக முடக்கலை நாங்கள் கற்பனை செய்யவில்லை எனவும் அமைச்சர் ஒலிவர் வேரன் கூறினார்.