ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சியாக,பார்கள், உணவகங்கள் மற்றும் களியாட்ட விடுதிகள் உட்பட பல்வேறு வணிக அமைப்புக்களில் இன்று சனிக்கிமை முதல் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படுவதாக மாகாண அரசு அறிவித்துள்ளது.
மாகாண முதன்மை மற்றும் இடைநிலை சுகாதார அதிகாரிகள் மற்றும் பிற நிபுணர்களுடன் கலந்தாலோசித்ததைத் தொடர்ந்து புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த ஐந்து வாரங்களாக ஒன்ராறியோவில் புதிய கோவிட்-19 தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்கள் அதிகளவில் ஒன்றுகூடுவதே தொற்று நோய் அதிகாரிக்க ஒரு முக்கிய காரணியாக உள்ளது.
ஒன்ராறியோவில் உணவகங்கள், பார்கள், களியாட்ட விடுதிகள் உள்ளிட்ட வணிக அமைப்புக்களுடன் தொடர்புடைய அதிகளவு இள வயதினர் தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்தே இந்த வணிக அமைப்புக்களில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புதிய விதிகளின் பிரகாரம் பார்கள், களியாட்ட விடுதிகள் உள்ளிட்ட வசதிகளில் இரவு 11 மணிக்குப் பின்னர் மதுபானம் விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இவ்வாறான இடங்களில் ஆட்கள் அதிக நேரம் ஒன்றுகூடுவதை மட்டுப்படுத்த முடியும் என மாகாண அரசு அறிவித்துள்ளது.
அத்துடன் நள்ளிரவு 12 மணி முதல் காலை 9 மணிவரை குறிப்பிட்ட இடங்களில் மது அருந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் உணவாகங்கள், பார்கள் மற்றும் களியாட்ட விடுதிகள் 12 மணியில் இருந்து அதிகாலை 5 மணிவரை மூடப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய உத்தரவுகள் செப்டம்பர் 26 சனிக்கிழமை அதிகாலை 12:01 மணி முதல் மாகாணம் முழுவதும் அமுலுக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ரொரண்டோவில் உள்ள களியாட்ட விடுதி ஒன்றிவ் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு ஊழியர் கோவிட்-19 தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அங்கு வந்து-சென்ற 550 பேரைத் தேடித் தனிமைப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இவ்வாறான நிலைமை ஏற்படாதிருப்பதைக் கருத்தில் கொண்டே புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.