கனேடியர்களுக்குத தேவையான மேலும் 20 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பெறுவதற்காக மற்றொரு மருந்தாக்க நிறுவனத்துடன் கனடா ஒப்பந்தம் செய்துள்ளதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இந்தத் தடுப்பூசியை அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கி வருகின்றன. இந்தத் தடுப்பூசி வெற்றிகரமாக அமைந்தால் அதில் 20 மில்லியன் சொட்டுக்களைப் பெற இந்த ஒப்பந்தம் வழி செய்கிறது.
இதனை விட சனோஃபி, கிளாக்சோஸ்மித்க்லைன், ஃபைசர், மாடர்னா, ஜோன்சன் & ஜோன்சன் மற்றும் நோவாவாக்ஸ் உள்ளிட்ட முக்கிய மருந்தாக்க நிறுவனங்களுடனும் கனடா ஏற்கவே தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.
கனேடியர்கள் கொரோனா வைரஸூக்கு எதிரான பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசியை விரைவாக பெற வேண்டும் என்பதே எங்களது அரசின் ஒரே நோக்கம். அது எங்கு உருவாக்கப்பட்டது என்பது முக்கியமல்ல என நேற்று வெள்ளி்க்கிழமை ஒட்டாவாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் ட்ரூடோ கூறினார்.
இதேவேளை, கோவாக்ஸ் (COVAX) தடுப்பூசி தயாரிப்பு, விநியோகம் தொடர்பான சர்வதேச கூட்டணியில் கனடா இணைகிறது என்றும் ட்ரூடோ அறிவித்தார்.
இந்தத் தடுப்பூசித் திட்டத்துக்கு கனடா 440 மில்லியன் கனேடிய டொலா்களை பங்களிப்புச் செய்யும்.
கனடாவின் இந்த முயற்சியால் இரு அனுகூலங்கள் உள்ளன. ஒன்று கனேடியர்களுக்குத் தேவையான மில்லியன் கணக்கான அளவிலான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள இந்தக் கூட்டணி வழி வகுக்கும். மற்றொன்று குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு தேவையான தடுப்பூசியைக் பெற்றுக்கொள்ளவும் இதன் மூலம் கனடா உதவுகிறது.
இந்த ஒப்பந்தம் கனடாவுக்கு 15 மில்லியன் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்கும் என்று ட்ரூடோ கூறினார்.
இந்த திட்டத்தில் சேருவதன் மூலம் வெற்றிகரமான தடுப்பூசி உலகம் முழுவதும் விரைவாகவும் நியாயமாகவும் விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்த கனடா உதவும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இந்த தொற்றுநோயை எந்த ஒரு நாட்டினாலும் தனியாக தீர்க்க முடியாது. வைரஸ் உலகில் எந்த நாட்டில் இருந்தாலும் அதனால் உலகின் அனைத்து நாடுகளுக்கும் ஆபத்து எனவும் பிரதமர் ட்ரூடோ தெரிவித்தார்.