பிரான்ஸில் பாரிஸ் மற்றும் பிற எட்டு நகரங்களில் சனிக்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொற்று நோயாளர் தொகை நேற்று மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை பிரான்ஸில் 30,621 நோய்த்தொற்று நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டனர்.
புதிய தொற்று நோயாளர்களுடன் பிரான்ஸில் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 809,684 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் மேலும் 88 கொரோனா மரணங்கள் நேற்று பதிவான நிலையில் மொத்தமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 33,125 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, பிரான்ஸில் கடந்த 7 நாட்களில் 6,529 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவா்களில் 1,750 பேர் தீவிர சிகிச்சைப் பிரிசில் உள்ளனர்.
அத்துடன் சோதனையில் தொற்று நோய் உறுதி செய்யப்பட்டவா்கள் நேற்று 12.6 வீதமாகப் பதிவாகினர்.
தொற்று நோய் தீவிரமடைந்துவரும் நிலையில் ஆபத்து வலயமான பாரிஸ் பிராந்தியம் உட்பட எட்டு நகரங்களில் சனிக்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
ஒரு மாதத்துக்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும்.
இந்த ஊடரங்கு உத்தரவை டிசம்பர் 1-ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் முயற்சிக்கும் என்று மக்ரோன் கூறினார்.
ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு 135 யூரோ அபராதம் விதிக்கப்படும். ஒரு தடவைக்கு மேல் குற்றமிழைத்தால் இந்த அபராதம் 1,500 யூரோவாக அதிகரிக்கும் எனவும் மக்ரோன் தெரிவித்தார்.
எனினும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள பகுதிகளுக்குள் விசேட அனுமதியுடன் மக்கள் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர். பொது போக்குவரத்துச் சேவையும் தொடர்ந்து செயற்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.