தொற்று நோயின் இரண்டாவது அலையுடன் ஐரோபிய நாடுகள் போராடிவரும் நிலையில் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் கொரோனா வைரஸ் தொற்று நோயின் ஒருநாள் உயர் மட்ட அதிகரிப்பை நேற்று சனிக்கிழமை பதிவு செய்துள்ளன.
சனிக்கிழமை வரையான 24 மணி நேரத்தில் பிரான்ஸில் இதுவரை இல்லாத அளவாக 32,427 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக அந்நாட்டு பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய தொற்று நோயாளர்களுடன் பிரான்ஸில் தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 867,197 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 33,292 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
தொற்று நோயின் அதிகரிப்புக்கு மத்தியில் தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட எட்டு பிரெஞ்சு நகரங்களில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
உணவகங்கள், பார்கள், சினிமாக்கள் மற்றும் பிற நிறுவனங்கள் இரவு 9 மணிக்கு பின்னர் மூடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் தொற்று மையங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளை அமுல்படுத்த நாடு 12,000 கூடுதல் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஜோ்மனியில் நேற்று 7,830 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக நாட்டின் நோய் கட்டுப்பாட்டு மையமான ரொபேர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவற்றுடன் ஜோ்மனியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 356,387 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் நேற்று பலியான 33 பேருடன் இதுவரை 9,767 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் தேவையற்ற பயணங்கள் மற்றும் விருந்துகளை இரத்து செய்து முடிந்தவரை வீட்டிலேயே இருக்குமாறு சாஞ்சலர் மேர்க்கெல் ஜேர்மனியர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.