வெளிநாடுகளில் மோதல்கள் மற்றும் துன்புறுத்தல்களில் இருந்து தப்பிக்கும் மக்களுக்கு உதவ கனடா மத்திய அரசு தனது முயற்சிகளை முடுக்கிவிட வேண்டும் என்று அகதிகளுக்கான சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எல்லை மூடல்கள் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் கனடாவுக்கு வரும் புலம்பெயர் குடியேற்றவாசிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. கனடா இப்போது வாரத்திற்கு சுமார் 250 புலம்பெயர்ந்தோரையே உள்ளீர்க்கிறது. ஜனவரி முதல் கிட்டத்தட்ட 6,000 அகதிகளை வரவேற்கவுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.
இவ்வாண்டு ஏறக்குறைய 32,000 புலம்பெயர்ந்தோரை வரவேற்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்திருந்தபோதும் தொற்று நோயால் அந்த இலக்கை அடைய முடியவில்லை.
இந்நிலையில் வெளிநாடுகளில் மீண்டும் கனடா தனது தூதரக நடவடிக்கைகளைத் தொடங்கி வருகிறது. மிக அவசரமான அகதிகள் வழக்குகளை அடையாளம் காண செயல்பட்டு வருகிறோம். தெரிவின் அடிப்படையில் கனடா வர அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என குடிவரவு அமைச்சர் மார்கோ மென்டிசினோவின் செய்தித் தொடர்பாளர் அலெக்ஸ் கோஹென் தெரிவித்தார்.
ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் , இடம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பு மற்றும் பிற கூட்டாளர்களின் ஒருங்கிணைந்த முயற்சியின் மூலம் ஒவ்வொரு வாரமும் சுமார் 250 அகதிகள் இப்போது கனடாவுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள் எனவும் அவா் குறிப்பிட்டார்.
கனடாவின் மூன்று ஆண்டு குடிவரவு திட்டத்தை அண்மையில் அறிவி்த்த குடிவரவு அமைச்சர் மென்டிசினோ 3 ஆண்டுகளில் சுமார் 12 இலட்சம் வரையான புலம்பெயர்ந்தவர்களை உள்ளீா்க்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதன் பிரகாரம் அடுத்த ஆண்டு சுமார் 36,000 புலம்பெயர்ந்தோரைஅனுமதிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அகதிகளை உள்ளீர்க்கும் கனடாவின் திட்டத்தை வரவேற்பதாக அகதிகளுக்கான வழக்கறிஞர் குழு தெரிவித்துள்ளது.
ஆனால் குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றங்கள் இல்லாமல் திட்டமிட்ட இலக்கை அடைவது கடினமாக இருக்கும் என அவா்கள் எச்சரித்துள்ளனர்.
எனினும் தொற்று நோய் நெருக்கடியின் மத்தியிலும் அச்சுறுத்தல்கள் உள்ள அகதிகளுக்கு கனடா தொடர்ந்து அடைக்கலம் அளித்து வருகிறது என குடிவரவு அமைச்சர் மார்கோ மென்டிசினோவின் செய்தித் தொடர்பாளர் அலெக்ஸ் கோஹென் தெரிவித்துள்ளார்.
பல நாடுகள் அகதிகளுக்கான கதவுகளை மூடியிருந்தாலும் உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை நாங்கள் வரவேற்கிறோம் எனவும் அவா் குறிப்பிட்டார்.