கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து கனடா மீள வேண்டுமானால் அதற்கு அனைத்துக் கனடியர்களினதும் கூட்டு முயற்சி அவசியம். இல்லையேல் இது நிரந்தர நெருக்கடியாக மாறக் கூடும் என கனடா வங்கி (Bank of Canada) எச்சரித்துள்ளது.
இந்தத் தொற்று நோய் அரசாங்கங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு மிகப் பெரும் கவலையான விடயமாக உள்ளது.
இந்நிலையில் தொற்றுநோய்க்குப் பின்னரான பொருளாதார மீட்சி தொடர்பில் இப்போதிருந்தே கொள்ளைகள் வகுக்கப்பட வேண்டும் என கனடா வங்கியின் மூத்த துணை ஆளுநர் கரோலின் வில்கின்ஸ் கூறினார்.
கொரோனா தொற்று நோயில் இருந்து சர்வதேசம் மீள்வது தொடர்பான சாதகமான செய்திகள் வெளியாகின்றபோதும், இந்த நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பலர் மீண்டும் மீள முடியாத ஒரு நிலை ஏற்படலாம் என்பது குறித்தும் நாங்கள் அவதானம் செலுத்த வேண்டும்.
பொருளாதாரம் ஒரு பொதுத்துறை பிரச்சினை. பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் முயற்சிகளில் தனியார் துறை முதலீடு மற்றும் பசுமை தொழில்நுட்பம் போன்றவையும் முக்கியம் என்று வில்கின்ஸ் கூறினார்.
கோவிட்19 தொற்றுநோய் நமது உடல்நலம் மற்றும் நமது பொருளாதார செழிப்பு ஆகிய இரண்டிற்கும் ஒரு வலுவான தடையாக உள்ளது. இதில் ஒன்று சரியாக இல்லாமல் மற்றொன்றை நாம் அடைய முடியாது எனவும் கனடா வங்கியின் மூத்த துணை ஆளுநர் கரோலின் வில்கின்ஸ் குறிப்பிட்டார்.
கனடாவிற்கும் பிற நாடுகளுக்கும் நிலையான பொருளாதார நடவடிக்கைகளின் திறனை இந்த தொற்றுநோய் சீர்குலைத்துள்ளது. இந்நிலையில் நலிவடைந்துள்ள வர்த்தக நிறுவனங்களை மீண்டும் நிலைநிறுத்தி வேலைவாய்ப்புக்களை உருவாக்குவுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவா் கூறினார்.
தொற்றுநோயிலிருந்து மீள்வது ஒரு பெரும் போரின் பின்னர் மீண்டெழுவதற்கு ஒப்பானது என வர்ணித்த கனடா வங்கி மூத்த துணை ஆளுநர் வில்கின்ஸ், தொற்று நோய்க்குப் பின்னரான பொருளாதார மீட்சிக்கு அனைத்துக் கனேடியர்களும் கூட்டிணைந்து ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.