கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட எம்.பி. ஒருவருடன் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
ஆஷ்பீல்டு எம்.பி. லீ ஆண்டர்சன் உள்ளிட்ட சிலரை பிரதமர் ஜோன்சன் கடந்த வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் பின்னர் ஆண்டர்சன் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்தே பிரதமரை தனிமையில் இருக்குமாறு பொது சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ஏற்கனவே தொற்று நோயின் முதல் அலையின்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான போரிஸ் ஜோன்சன், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மீண்டுவந்தார்.
இந்நிலையில் தற்போது ஜோன்சன் நலமாக உள்ளார். அவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பொது சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலின்படி அவர் தனிமையில் உள்ளார். இன்னும் 11 நாட்கள் அவர் தனிமைப்படுத்திக் கண்காணிக்கப்படுவார். எனினும் தனிமைப்படுத்தலில் இருந்தவாறு அவர் பணிகளைத் தொடர்வார். எனவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: இங்கிலாந்து