ரொராண்டோ மற்றும் பீல் பிராந்தியங்களில் வசிப்போர் யோர்க் பிராந்தியத்திற்கு பயணம் செய்ய வேண்டாம் என மார்க்கம் நகர மேயர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரொரண்டோ மற்றும் பீல் பிராந்தியங்களில் தொற்று நோயாளர் தொகை அதிகரித்துள்ளது. சிவப்பு மண்டல பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் பகுதிகள் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் பொது முடக்க நிலைக்கு நகரும் நிலையில் மார்க்கம் மேயர் ஃபிராங்க் ஸ்கார்பிட்டி இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
யோர்க் பிராந்தியத்தில் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்படும் தொற்று நோயாளர் நேர்மறை வீதம் 6-ஆக உள்ளது. இந்நிலையில் சிவப்பு மண்டல கட்டுப்பாட்டு நிலையை இந்தப் பிராந்தியம் நெருங்கி வருகிறது.
இங்கு சமூக முடக்கல் நிலையைத் தவிர்க்கும் நோக்கில் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும் வர்த்தக மையங்களில் அதிகளவானவர்கள் ஒன்றுகூடுவதால் தொற்று பரவல் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு வர்த்தக மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் சிவப்பு மண்டல விதிகள் அமுலாக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
மொத்த சில்லறை வணிக நிலையங்களில் மக்கள் அதிகளவில் ஒன்றுகூடுவதைத் தவிர்க்க இந்தப் பகுதிகளில் பொலிஸ் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகளின் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என யோர்க் பிராந்திய மேயர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை ஒன்ராறியோவில் அதிகளவான தொற்று நோயாளர் தொகை பீல் பிராந்தியத்தில் பதிவானது. இங்கு 400 புதிய தொற்று நோயாளர்கள் நேற்று உறுதிப்படுத்தப்பட்டனர்.
அத்துடன், ரொரண்டோவில் -393 பேரும் யோர்க் பிராந்தியத்தில் 168 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தொற்று நோய் ஆரம்பத்தில் இருந்து இதுவரை ஒன்ராறியோவில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்று நோயாளர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.