முள்ளிவாய்க்கால் நினைவாக யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், 2018ஆம் ஆண்டு ஏப்ரலில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
எனினும், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் மாணவர்களால் முடிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று இரவு பல்கலைக்கழகத்திற்குள் JCB வாகனம் வந்தபின்னர் பாதைகள் அடைக்கப்பட்டன.
அதன் பின்னர் குறித்த வாகனம் நினைவுத்தூபியை இடித்து அழித்துள்ளது.
இராணுவத்தினரோ பொலிஸ் தரப்பினரோ அங்கு பிரசன்னமாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்தபோதிலும் துணைவேந்தர் உள்ளே இருப்பதாக பல்கலைக்கழகப் பாதுகாப்புத் தரப்பின் பெயர் குறிப்பிடவிரும்பாத உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை துணைவேந்தரைத் தொடர்புகொள்வதற்கு ஊடகவியலாளர்கள் சில மணி நேரமாக தொடர்ந்தும் முயன்ற போதிலும் பதில் கிடைக்கவில்லை.
கடந்தவாரம் இராணுவ உயர் அதிகாரி தலைமையிலான இராணுவத்தினர் பல்கலைக்கழகத்துக்கு வந்து குறித்த நினைவுத்தூபியை பார்வையிட்டுச் சென்றமை தொடர்பில் நம்பகரமான தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், துணைவேந்தரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, நத்தார் வாழ்த்துத் தெரிவிக்க வந்தார்கள் என்றும் வேறு தேவைக்காக அவர்கள் வரவில்லை என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை,
அரசியல் பிரமுகர்கள் மணிவண்ணன், சுகாஸ் உட்பட்டவர்களும், ஊடகவியலாளர்களும் வாயிலில் கூடியுள்ளனர் என்று அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
Category: செய்திகள், புதிது
Tags: யாழ்ப்பாணம்