உலகின் மிகப் பெரிய கொரோனா வைரஸ் தடுப்பூசித் திட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இணைய வழி நேரலை ஊடாக இன்று சனிக்கிழமை காலை ஆரம்பித்து வைத்தார்.
இன்று மொத்தம் 3 ஆயிரம் மையங்களில் தலா 100 பேர் வீதம் 3 இலட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது.
இதற்காக கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் தடுப்பூசி மருந்துகள் ஏற்கனவே இந்தியா முழுவதும் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
முன்னுரிமை அடிப்படையில் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் நோய்த்தொற்றால் எளிதில் பாதிக்கக் கூடிய வாய்ப்புள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின்படி, இந்தியாவில் இருக்கும் ஒரு கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி வழங்கப்படும்.
அவர்களைத் தொடர்ந்து பொலிஸார், இராணுவத்தினர் உள்ளிட்ட தரப்பினருக்கு தடுப்பூசி போடப்படும்.
இதன் பின்னர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 50 வயதுக்குட்பட்ட நீண்ட காலமாக சிக்கலான உடல் உபாதைகளோடு இருப்பவர்களுக்கு தடுப்பூசி கொடுக்கப்படும்.
இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்துக்குள் 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்தை வழங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளமை குறிப்பி்டத்தக்கது.