இந்தியாவின் சட்டங்களுக்கு அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் ருவிட்டர் நிறுவனம் கட்டுப்பட்டே ஆக வேண்டும். இல்லையெனில் அந்த சமூக ஊடக நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியா நேற்று எச்சரித்த நிலையில் 500 பேரின் ருவிட்டர் கணக்குகள் நேற்று உடனடியாக முடக்கப்பட்டன.
விவசாய சீர்திருத்தங்கள் தொடர்பான விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களுடன் தொடர்புடைய ருவிட்டர் கணக்குகளே பெரும்பாலும் முடக்கப்பட்டன.
இந்திய மத்திய அரசின் வேண்டுகோளின் பிரகாரம் விவசாய சட்டச் சீர்திருத்தங்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்ட பல நூற்றுக்கணக்கான ருவிட்டர் கணக்குகளை கடந்த வாரம் ருவிட்டர் முடக்கியது.
ஆனால் பயனர்களின் கருத்துச் சுதந்திரத்தை மேற்கோள் காட்டி சில மணி நேரங்களுக்குள் தனது முடிவை மாற்றி அந்தக் கணக்குகள் மீண்டும் செயற்படுத்த ருவிட்டர் அனுமதி அளித்தது.
இந்நிலையில் இந்தியாவின் சட்டங்களுக்கு, இங்கு தொழில் செய்யும் எந்தவொரு நிறுவனமும் கட்டுப்பட்டே தீர வேண்டும் என விட்டர் நிறுவனத்திடம் இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலாளர் அஜய் பிரகாஷ் சாஹ்னே நேற்று புதன்கிழமை கண்டிப்புடன் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ருவிட்டர் நிறுவனத்தின் கோரிக்கையின் பிரகாரம் இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலாளர், ருவிட்டர் நிறுவனத்தின் சர்வதேச பொதுக் கொள்கைப்பிரிவு துணைத் தலைவர் மோனிக் மெச்சே, துணை பொது ஆலோசகர் மற்றும் சட்டப்பிரிவு துணைத் தலைவர் ஜிம் பேக்கர் ஆகியோர் நேற்று இணைய நேரலையில் இது குறித்துப் பேசினர்.
இந்திய விவசாயிகள் இனப்படுகொலை' (#farmersgenocide) என்ற பெயரில் பகிர அனுமதிக்கப்பட்ட ஹாஷ்டாக் மற்றும் காலிஸ்தான் அனுதாபிகள், பாகிஸ்தானின் ஆதரவுடன் கூடிய ருவிட்டர் கணக்குகளை நீக்குமாறு இந்திய அரசு ட்விட்டருக்கு உத்தரவிட்ட நிலையில் இந்த சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் இந்தியாவில் சட்டபூர்வமாக பிறப்பிக்கப்படும் எந்தவொரு ஆணைக்கும் கட்டுப்பட்டே தீர வேண்டும் என ருவிட்டர் நிறுவனத்திடம் இந்திய அதிகாரிகளால் அழுத்தமாக வலியுறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்திய அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடக்க ஒத்துழைப்பு வழங்குவதாக அரசுத்துறை செயலாளரிடம் ருவிட்டர் நிறுவன நிர்வாகிகள் கூறியதாக இந்திய மத்திய அரசு உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் சந்திப்பைத் தொடர்ந்தே சுமார் 500 ருவிட்டர் கணக்குகள் உடனடியாக முடக்கப்பட்டன.