மியான்மர் இராணுவத்தின் உத்தரவுகளை ஏற்க மறுத்து அந்நாட்டுப் பொலிஸார் பலர் அடைக்கலம் தேடி குடும்பங்களுக்குடன் எல்லைகள் ஊடாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர்.
அண்மையில் மட்டும் சுமார் 30 பொலிஸ் அதிகாரிகள் அடைக்கலம் தேடி இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாக இந்திய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில் இவ்வாறு எல்லை தாண்டி இந்தியாவுக்குள் அடைக்கலம் புகுந்துள்ள பொலிஸாரைத் திரும்பி அனுப்புமாறு மியான்மர் இராணுவ ஆட்சியாளர்கள் இந்தியாவைக் கோரியுள்ளனர். இந்தியா - மியான்மர் நட்புறவு தொடர அவா்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என மியான்மர் இராணுவ ஆட்சியாளர்கள் இந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளனர். கடந்த பெப்ரவரி சதிப்புரட்சி மூலம் மியான்மர் இராணுவம் அங்கு ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து அதனை எதிர்த்து அந்நாட்டு மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஒரு மாதத்தைக் கடந்து போராட்டங்கள் ஓயாமல் தொடர்ந்து வருகின்றன. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மியான்மர் பாதுகாப்பு தரப்பினர் நடத்திய தாக்குதல்களில் இதுவரை குறைந்தது 55 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமையும் எதிர்ப்பாளர்கள் இராணுவத்தை எதிர்த்து நாடு முழுவதும் கூடி எதிர்ப்பு ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதன்போது போராட்டக்காரர்களைக் கலைக்க பொலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகள், ரப்பர் தோட்டாக்கள் மற்றும் கையெறி குண்டுகளை பயன்படுத்தியதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான அடக்குமுறைகள் தொடர்ந்து நீடிக்கும் நிலையிலேயே இராணுவ ஆட்சியாளர்களின் உத்தரவுகளை பின்பற்றுவதற்கு விருப்பமில்லாத பொலிஸ் அதிகாரிகள் பலர் அங்கிருந்து குடும்பங்களுடன் தப்பியோடி இந்தியாவுக்குள் தஞ்சமடைந்துள்ளனர்.