சீனாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையான காலப்பகுதியில் சுமார் 65 மில்லியன் பேருக்கு கோவிட்19 தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு தடுப்பூசிகளை வழங்கத் தொடங்கிய முதல் நாடுகளில் சீனாவும் ஒன்று. பல மில்லியன் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தாலும் ஒப்பீட்ளவில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை விட குறைந்தளவு தடுப்பூசியே உள்நாட்டில் போடப்பட்டுள்ளது.
சீனாவில் உருவாக்கப்பட்ட நான்கு தடுப்பூசிகளுக்கு சீன அரசு இதுவரை ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டின் தலைநகரான பீஜிங்கில் 10 மில்லியன் தடுப்பூசிகள் பகிரப்பட்டுள்ளன. மேலும் 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர் என பெய்ஜிங் டெய்லி தெரிவித்துள்ளது.
சீனா தனது 1.4 பில்லியன் மக்களில் 40% பேருக்கு ஜூன் மாத இறுதிக்குள் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடைய சீனா சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 4 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும்.
இந்நிலையில் சீன தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தங்கள் உத்பத்தித் திறனை தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் தடுப்பூசி போடும் திட்டமும் அதிகரிக்கும் என சீன கைத்தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு அதிகாரி தியான் யுலாங் தெரிவித்துள்ளார்.