அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாதளவு பலத்த மழை கொட்டித் தீா்த்து வருவதால் சிட்னியில் பெரும்பாலான பகுதிகள் வெள்ள அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.
நியூ சவுத்வேல்ஸ் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில் இயற்கைப்பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தமது இருப்பிடங்களிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய நியூ வவுத்வேல்ஸ் முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் மாநிலத்தின் சில பகுதிகளில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் மழை பெற்று வருவதாக தெரிவித்தார்.
கடும் மழை, வெள்ளத்தால் சிட்னியில் பிரதான நீர் ஆதாரமான வாரகம்பா அணை நிரம்பி வழிகிறது.
நியூ சவுத்வேல்ஸில் வெள்ளநீரில் சிக்கிய பலர் மீட்கப்பட்டுள்ளனர். இங்கு முக்கிய பல வீதிகள் மூடப்பட்டுள்ளன.
மழை மேலும் தொடர்ந்தால் சிட்னியில் மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்படலாம் என முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் தெரிவித்தார்.
ஏற்கனவே மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள அவசரகால வெளியேற்ற மையங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பல பாடசாலைகள் திங்கள்கிழமை மூடப்படும் என்று மாநில அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேறாமல் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சிட்னியில் அடுத்த 12 மணிநேரத்தில் 100 மி.மீ. வரை மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: ஆஸ்திரேலியா