நியூசிலாந்து வணிக வளாகம் ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்தனர். அவர்களில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நியூசிலாந்தின் தெற்கு தீவான டுனெடினில் உள்ள வணிக வளாகத்தில் அந்நாட்டு நேரப்படி இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் குறித்து அதிா்ச்சியும் கவலையும் வெளியிட்டுள்ள நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன், தாக்குதலின் பின்னணி குறித்து இதுவரை தெளிவாகத் தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.
நியூசிலாந்தில் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் அரிதானவை. ஆனால் 2019-ஆம் ஆண்டு ஒரு வெள்ளை மேலாதிக்கவாதி இரண்டு மசூதிகளுக்குள் புகுந்து 50 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: நியூசிலாந்து