சீனாவின் சனத்தொகை பெருக்க விகிதம் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் சீனாவின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 0.53 சதவிகிதமாக இருந்தது. அதற்கு முந்தைய பத்தாண்டுகளில் இது 0.57 சதவிகிதமாக இருந்து வந்தது என சீன அரசு வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள்தொகை பெருக்கம் குறைந்திருப்பதால் தற்போதைய சீனாவின் மக்கள்தொகை 141 கோடியாக பதிவாகியுள்ளது. சீனாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 2020-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் 70 இலட்சம் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதேவேளை, கடந்த ஆண்டில் மட்டும் 1.2 கோடி குழந்தைகள் பிறந்திருப்பதாக சீன தேசிய புள்ளிவிவர அமைப்பின் தலைவர் நிங் ஜிஷே தெரிவித்துள்ளார். 2016-ஆம் ஆண்டில் பிறந்த 1.8 கோடி குழந்தைகளை விட இந்த எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்து போனதற்கு சமூகப் பொருளாதார வளர்ச்சியே காரணம் எனவும் ஜிஷே குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பிறப்பு விகிதம் குறைந்துவருவதை அடுத்து அதனை சரிசெய்ய சீனா நடவடிக்கை எடுத்துவருகிறது.
ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய கொள்கையை 2016-ஆம் ஆண்டில் சீனா நீக்கியது. இரண்டு குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அனுமதி அளித்தது. எனினும் மக்கள் தொகை வளர்ச்சி மந்தமான போக்கிலேயே உள்ளது புள்ளவிபரங்களில் தெரியவந்துள்ளது.
மக்கள்தொகையைக் குறைப்பதற்காக கடுமையான நடவடிக்கைகளை சீனா கடந்த 1979ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்று கொள்கை கடுமையாக அமுல்படுத்தப்பட்டது. இதை மீறிய குடும்பங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வேலை பறிக்கப்பட்டது. சில நேரங்களில் வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்யப்பட்டது. இதன் மூலமாக சீனாவின் மக்கள்தொகை படிப்படியாக குறையத் தொடங்கியது.
உழைக்கும் மக்கள்தொகை எனக் கணிக்கப்படும் 16 முதல் 59 வயது வரையிலான மக்களின் எண்ணிக்கை கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பைவிட சுமார் 4 கோடி அளவுக்குக் சீனாவில் குறைந்துள்ளது.
ஆயினும் உழைக்கும் மக்கள் இப்போதும் 88 கோடி பேர் இருக்கிறார்கள் என சீன அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்தால் சீனாவின் பொருளாதார வளர்ச்சி முடங்கும் நிலை ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.