சீனாவில் 100கோடிக்கும் அதிகாமானோருக்கு கோவிட் 19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சீன தேசிய சுகாதார ஆணையத்தின் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகெங்கும் வழங்கப்பட்ட மொத்த கோவிட் தடுப்பூசி எண்ணிக்கையில் இது மூன்றில் ஒரு பங்காகும்.
சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று உலகில் தொடர்ந்து பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. எனினும் சீனா தொற்று நோயை கட்டுப்படுத்தியுள்ளது. அத்துடன் தடுப்பூசி போடும் பணிகளையும் சீனா துரிதப்படுத்தியுள்ளது.
சீனாவின் மக்கள் தொகை 140 கோடியாக உள்ள நிலையில் இதுவரை 100 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஜூலை மாதத்துக்குள் ஒட்டுமொத்த சனத்தொகையில் 40 வீதமானோருக்கு முழுமையாக இரண்டு தடுப்பூசிகளையும் போட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
அத்துடன், மொத்த மக்கள் தொகையில் குறைந்தது 70 வீதமானவர்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி போடப்படும் என சீன தேசிய சுகாதார ஆணையத்தின் துணைத் தலைவர் ஜெங் யிக்சின் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு முதல் சீனாவில் மொத்தம் 21 கோவிட்-19 தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனைகளில் நுழைந்துள்ளன. இதுவரை நான்கு தடுப்பூசிகளுக்கு நிபந்தனை சந்தைப்படுத்தல் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டிற்கு அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.