இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கொவிட் 19 தெற்று நோயைக் கருத்தில் கொண்டு இவ்வாண்டு மிக எளிமையாக நடைபெற்று வருகின்றன.
சுதந்திர தினத்தையொட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார் . இந்த நிகழ்வின் இந்திய விமான படைக்குச் சொந்தமான இரு ஹெலிகப்டர்கள் பூக்களை தூவின.
சுதந்திர தின நிகழ்வுகளை ஒட்டி டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று டெல்லியில் பெருமெடுப்பிலான இராணுவ அணிவகுப்பு, கலை நிகழ்வுகள் உள்ளிட்ட நிகழ்வுகள் கோலகலமாக இடம்பெறுவது வழமையாகும்.
எனினும் தொற்று நோய் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இன்றைய விழாவில் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களே அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் வென்ற இந்திய வீரர்கள், இந்திய விளையாட்டு ஆணையத்தை சேர்ந்த இரு அதிகாரிகள் மட்டும் இன்றைய சுதந்திர தின நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அத்துடன், கொவிட்19 தொற்று நோய்க்கு எதிராக போரில் முன்களத்தில் நின்று போராடும் முன் கள சுகாதார பணியாளர்களைக் கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கும் செங்கோட்டையில் இம்முறை தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
செங்கோட்டையில் கொடியேற்ற வந்த பிரதமர் நரேந்திர மோடியை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு இணையமைச்சர் அஜய் பட், பாதுகாப்புத் துறை செயலாளர் அஜய் குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து இராணுவம் மற்றும் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.
பின்னர் தேசிய கொடிக்கு இந்திய ,ராணுவம், கடற்படை, விமான படை , டெல்லி பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 5 அதிகாரிகளும் 130 வீரர்களும் வீர வணக்கம் செலுத்தினர். தேசியக் கொடியை ஏற்றியவுடன் முதல் முறையாக விமான படைக்குச் சொந்தமான இரு மிக் 17 ரக ஹெலிகப்டர்கள் பூக்களை தூவின.
முன்னதாக ராஜ்கோட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்த் தூவி மரியாதை செலுத்தினார்.