ஆப்கானிஸ்தானில் இருந்து 1,100 பேரை கனடா இதுவரை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளதாக குடிவரவு அமைச்சர் மார்கோ மெண்டோசினோ தெரிவித்தார்.
தலிபான்கள் காபூலைக் கைப்பற்றுவதற்கு முன்பாக வெளியேறிய 40 குடும்பங்கள் இப்போது கனடாவில் கோவிட் -19 தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்துள்ளன எனவும் அவா் கூறினார்.
12 இராணுவ விமானங்களில் இதுவரை இதுவரை 1,100 பேரை எங்கள் ஆயுதப் படையினர் பாதுகாப்பாக மீட்டு கொண்டுவந்துள்ளனர் எனவும் அமைச்சர் மார்கோ மெண்டோசினோ குறிப்பிட்டார்.
ஆகஸ்ட்-04 முதல் ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் கனடாவிற்கு வரத் தொடங்கினர். கடந்த வியாழக்கிழமைக்குப் பின்னர் மட்டும் 3 விமானங்களில் 400 மேற்பட்டோரை கனடா ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றியுள்ளது.
ஆகஸ்ட் 19-ஆம் திகதி 175 ஆப்கானியர்கள் மற்றும் 13 வெளிநாட்டினரை ஏற்றிக்கொண்டு கனேடிய விமானம் காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. வெள்ளிக்கிழமை 106 பேர் வெளியேற்றப்பட்டனர். சனிக்கிழமை 121 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர் எனவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசிய மெண்டோசினோ தெரிவித்தார்.
இதேவேளை, ஆப்கானிஸ்தானில் இருந்து 2,500 அமெரிக்க பிரஜைகள் உட்பட 17,000 பேரை அமெரிக்கா வெளியேற்றியுள்ளது என அந்நாட்டு இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் வில்லியம் டெய்லர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் விரைவாக மக்களை வெளியேற்றுவதற்காக இராணுவ விமானங்களுடன் 18 சிவில் விமானங்களையும் பயன்படுத்துவதாக அமெரிக்கா நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
கடந்த 24 மணி நேரங்களில் மட்டும் 8,000 பேரை வெளியேற்றியதாகவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் காபூல் விமான நிலையத்தில் மேலும் சில ஓடுபாதைகள் திறக்கப்படுவதால் இன்னும் வேகமாக ஆப்கானில் இருந்து அதிகளவு மக்களை வெளியேற்ற முடியும் என கனடா தெரிவித்துள்ளது.
எனினும் காபூல் விமான நிலையத்தில் தொடர்ந்தும் நிலையற்ற தன்மை காணப்படுவதாக கனேடிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நிலைமை ஆபத்தாக உள்ளது. இதனால் ஆபத்தான பிரிவினருடன் நாங்கள் தொடர்ந்தும் தொடர்பில் இருக்கிறோம். அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருகிறோம். அவர்களை அழைத்து வர ஏற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன என கனடா குடிவரவு அமைச்சர் மார்கோ மெண்டோசினோ தெரிவித்தார்.
அனைவருக்கும் பொதுமன்னிப்பளிக்கும் தங்கள் வாக்குறுதிகளை தலிபான்கள் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் வெளியேற விரும்பும் மக்கள் வெளியேற முடிந்தவரை நாங்கள் உதவுவோம் என்று அமைச்சர் கூறினார்.
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முயற்சிக்கும் ஒவ்வொரு நபரையும் தலிபான்கள் அனுமதிக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம் எனவும் மார்கோ மெண்டோசினோ தெரிவித்தார்.
இதற்கிடையில் காபூல் விமான நிலையத்தில் நிலைமை ஒவ்வொரு மணி நேரமும் மாறிக்கொண்டிருக்கிறது என கனடா பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
நிலைமை மிகவும் குழப்பமானதாகவும் கடினமானதாகவும் இருக்கிறது எனவும் அவா் மேலும் குறிப்பிட்டார்.