இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதலாவது இனிங்ஸில் இங்கிலாந்து பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாது 78 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்திய அணி.
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி லீட்சில் நேற்று ஆரம்பமாகியது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித்தலைவர் வீராட் ஹோலி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
இதையடுத்து முதலில் துடுப்பொடுத்தாடிய இந்திய அணிக்கு ஆரம்பம் முதல் இறுதிவரை அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாகவே இருந்தது.
முதல் ஓவரின் 5வது பந்தில் கே.எல்.ராகுலை ஓட்டமெதும் பெறாத நிலையில் ஆட்டமிழக்கச் செய்து விக்கெட் வேட்டையை ஆரம்பித்து வைத்தார் ஜேம்ஸ் ஆன்டர்சன்.
அடுத்து வந்த, புஜார-01, விராட் ஹோலி-07, ரஹாணே-18, ரிசப் பந்த்-02, ரோகித் சர்மா-19, ஜடேஜா-04, மொகமட் ஷமி-0, பும்ரா-0, சிராஜ்-03 ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இசாந்த் ஷர்மா ஆட்டமிழக்காது 8 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
இறுதியில் இந்திய அணி 40.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 78 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தது.
பந்து வீச்சில் ஜேம்ஸ் ஆன்டர்சன் மற்றும் ஓவர்டேன் தலா 3 விக்கெட்டுக்களையும், ரொபின்சன் மற்றும் கர்ரன் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.
இதையடுத்து தனது முதலாவது இனிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி வலுவான ஆரம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் அரைச்சதம் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
ரோரி பேர்ன்ஸ்- 52, ஹசீப் ஹமீத் - 60 ஓட்டங்களையும் பெற்றும் களத்தில் உள்ளனர்.
இதன் மூலம் முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 120 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இந்திய அணியைவிட 42 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து அணி.
போட்டியின் 2வது நாள் ஆட்டம் இன்றாகும்.
Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து, இந்தியா