பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மீது முட்டை வீசித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லியோனில் திங்கட்கிழமை நடந்த சர்வதேச உணவு - வர்த்தகக் கண்காட்சிக்குச் சென்றபோது கூட்டத்தில் இருந்த ஒருவர் இம்மானுவல் மக்ரோன் மீது முட்டையை வீசித் தாக்குதல் நடத்தினார்.
மக்ரோனின் தோள்பட்டையில் விழுந்து தெறித்த முட்டை நிலத்தில் விழுந்து உடைந்தது என சம்பவ இடத்தில் இருந்த பிரெஞ்சு பத்திரிகையாள லியோன் மக் செய்தியாளர் ப்ளோரன்ஸ் லாகோ தெரிவித்துள்ளார்.
சிர்ஹா சர்வதேச உணவு - வர்த்தகக் கண்காட்சியில் இடம்பெற்ற இந்த முட்டைத் தாக்குதல் சம்பவத்தின் வீடியோ காட்சியை லியோன் மக் தனது ருவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
கூட்டத்தில் ஒரு மனிதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்துவதைகயும் அதற்கு மக்ரோன் மீது முட்டை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதையும் அந்த வீடியோவில் காண முடிகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணி என்ன? என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை. ஒரு இளைஞன் மக்ரோனை நோக்கி முட்டையை வீசியதாக லியோன் மக் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து உடனடியாக பாய்ந்து சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் முட்டை வீதிய நபரை மடக்கி அந்த இடத்தில் இருந்து கொண்டு சென்றனர்.
இதேவேளை, முட்டை வீச்சு சம்பவம் மிகைப்படுத்தப்பட்டதாக சம்பவ நேரத்தில்
மக்ரானுடன் இருந்த பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகையான எலிசி அரண்மனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இரண்டு மணிநேரம் நிகழ்வில் பங்கேற்றார். அவர் அங்கு அன்புடன் வரவேற்கப்பட்டார். எல்லாம் அமைதியாக நடைபெற்றது எனவும் அவா் தெரிவித்துள்ளார்.
மக்ரோன் முன்னர் 2017 ஆம் ஆண்டு ஜனாதிபதி தோ்தலில் வேட்பாளராக போட்டியிட்டவேளை அவர் மீது முட்டை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது வீசப்பட்ட முட்டை அவரது தலையில் பட்டு உடைந்தது.
இவ்வாண்டு ஜூன் மாதம் தென்கிழக்கு பிரான்சுக்கு மக்ரோன் விஜயம் செய்து பொதுமக்களுடன் பேசியவேளை, கூட்டத்தில் இருந்த ஒருவர் அவரது முகத்தில் அறைந்தார். மக்ரோனின் பாதுகாப்பு அதிகாரிகள் தாக்குதல் நடத்திய நபரை தரையில் விழுத்தி இழுத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.