சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும் ஐ.பி.எல். ஆட்டங்களில் தொடர்ந்து விளையாடி வரும் மகேந்திர சிங் டோனி தனது கடைசிப் போட்டி குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் முன்னணி வீரருமான மகேந்திர சிங் டோனி கடந்த ஆண்டு ஓகஸ்ட்-15 அன்று சர்வதேச கிரிக்கெட் போட்யில் இருந்து ஓய்வு பெற்றார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும் ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக தொடர்ந்தும் விளையாடி வருகின்றார்.
நடப்பு ஐ.பி.எல். தொடரிலும் சென்னை அணிக்கு தலைமைதாங்கி பிளே ஒப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடருடன் சகலவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து டோனி ஓய்வு பெறக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் டோனி இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியோடு ஓய்வு பெறவில்லை. அடுத்த ஆண்டு ஐ.பி.எல்.லிலும் விளையாடுகிறார். சென்னையில் விளையாடுவதுதான் தனது கடைசி போட்டியாக இருக்கும் என்று டோனி தெரிவித்து உள்ளார்.
இந்திய சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு தினத்தையொட்டி இணையவழியூடாக டோனி ரசிகர்களுடன் உரையாடிய போது இதை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நான் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்ற அறிவிப்பை சொல்ல சுதந்திர தினத்தைவிட சிறந்த ஒரு நாள் இருக்காது என எண்ணி அதை செய்தேன்.
அதேநேரத்தில் எனக்கான பிரிவு உபச்சார போட்டியாக (ஃபேர்வெல்) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சென்னையில் நான் விளையாடும் ஆட்டம் அமைய வாய்ப்பு உள்ளது. அதைவிட சிறந்ததொரு ஃபேர்வெல் எனக்கு இருக்க முடியாது.
இவ்வாறு டோனி கூறினார்.
ஓய்வுக்கு பிறகு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு நடிப்பு என்பது எளிதானது அல்ல. ஓய்வுக்கு பிறகும் கிரிக்கெட்டுடனான தொடர்பில் இருப்பேன் என்று அவர் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்த மாதம் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் ஆலோசகராக டோனி நியமிக்கப்பட்டு உள்ளார்.
அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு, சென்னை