இந்திய தலைநகர் டெல்லியில் காற்று மாசு அபாயகரமான அளவிற்கு உயர்ந்துள்ளதால் இன்று முதல் ஒரு வாரத்துக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அரச அலுவலகங்களை மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. டெல்லி மற்றும் அதனை ஒட்டியுள்ள மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாய கழிவுகள் எதிரொலியாகவும் , அதிகரித்த வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை காரணமாகவும் காற்றின் தரம் சுவாசிக்க தகுதியற்ற அளவிற்கு மோசம் அடைந்துள்ளது.
இதற்கிடையே காற்று மாசு தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம், டெல்லியில் காற்று மாசு மோசமானது குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
காற்றின் தரத்தை உயர்த்த ஏற்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பிய நீதிமன்றம், தேவைப்பட்டால் காற்று மாசைக் குறைக்க 2 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தலாம் எனவும் உத்தரவிட்டது.
இதையடுத்து மாணவர்களின் நலன் கருதி இன்று முதல் ஒரு வாரத்திற்கு மாணவர்கள் பாடசாலைகளுக்கு விடுமுறை அளித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்தல் விடுத்துள்ளார். அத்துடன், அரச பணியாளர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்துமாறு டெல்லியில் உள்ள தனியார் நிறுவனங்களையும் முதல்வர் கேட்டுக் கொண்டார்.
அத்துடன், நேற்று முதல் எதிர்வரும் 17-ஆம் திகதி வரை கட்டுமான பணிகள் அனைத்தையும் இடை நிறுத்துமாறும் டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.