பிரேசிலில் அமேசான் மழைக்காடுகளை அழிக்கும் நடவடிக்கை கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக உத்தியோகபூா்வ புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வரும் பிரேசிலில் காடழிப்பு நடவடிக்கை 22% அதிகரித்துள்ளதாக பிரேசிலின் விண்வெளி ஆய்வு நிறுவனம் (Inpe) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற COP26 காலநிலை உச்சிமாநாட்டில் 2030 ஆம் ஆண்டிற்குள் காடழிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்த பல நாடுகளில் பிரேசிலும் ஒன்றாகும். எனினும் அங்கு காடழிப்பு தீவிரமடைந்துள்ளமை கவலைய ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் உள்ள அமேசான் காடுகளில் சுமார் மூன்று மில்லியன் வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகள் உள்ளன. இக்காடுகளில் சுமார் 10 இலட்சம் வரையான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
புவி வெப்பமடைதலின் வேகத்தை குறைப்பதில் அமேசான் காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சமீபத்திய தரவுகளின்படி 2020-21 காலகட்டத்தில் சுமார் 13,235 சதுர கி.மீ. (5110 சதுர மைல்கள்) அமேசான் மழைக்காடுகாடுகள் அழிக்கப்பட்டதாக தெரியவருகிறது.
கடந்த 2006 -ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒரே வருடத்தில் அதிகளவு காடுகள் நடப்பாண்டில் அழிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் காடழிப்பு தொடர்பான தரவுகள் கவலையை ஏற்படுத்துவதாக பிரேசில் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜோகிம் லீட் தெரிவித்துள்ளார். இவ்வாறான குற்றங்களைத் தடுக்க இன்னும் வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துவதாகவும் அவா் கூறினார்.
இதேவேளை, தற்போதைய ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ ஆட்சியின் கீழ் தான் அமேசான் காடழிப்பு மிக வேகமாக அதிகரித்துள்ளது. மழைக்காடுகளை அழித்து விவசாயம் மற்றும் சுரங்க நடவடிக்கைகளை அவர் ஊக்குவித்துவருகிறார். எனினும் தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஜெய்ர் போல்சனாரோ மறுத்து வருகிறார்.
ஆனால் இம்மாதம் கிளாஸ்கோவில் நடந்த காலநிலை உச்சி மாநாட்டில் காடழிப்பை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் அழிக்கப்பட்ட காடுகளுக்கு நிகராக காடு வளர்ப்புத் திட்டத்துக்கும் ஒப்புக்கொண்டு பல நாடுகளுடன் இணைந்து பிரேசில் கையெழுத்திட்டது.
அத்துடன், காடழிப்பை நிறுத்துதல், அழிக்கப்பட்ட காடுகளை மீள் வளர்ப்பு செய்தல், காட்டுத் தீயை எதிர்த்துப் போராடுதல் மற்றும் இக்காடுகளில் வாழும் பழங்கு சமூகங்களுக்கு அதரவளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக 19.2 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.