இந்தியா - ரஷ்யா இடையிலான இருதரப்பு உச்சி மாநாடு இந்திய தலைநகர் டெல்லியில் இன்று மாலை ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது.
இம்மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், இந்திப் பிரதமரைச் சந்தித்துப் பேசினார்.
இந்தியா - ரஷ்யா இடையிலான இருதரப்பு உச்சி மாநாடு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த மாநாடு நடக்கவில்லை. இந்நிலையில் இன்று டெல்லியில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
உச்சி மாநாட்டை ஒட்டி தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினுடன் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கே ஷோய்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் ஆகியோரும் வந்துள்ளனர்.
இந்த மாநாட்டின் போது பேசிய பிரதமர் மோடி, பல்வேறு சவால்களை சந்தித்தபோது இந்தியா - ரஷ்யா இடையேயான நட்பு வளர்ந்து செல்கிறது. நமது சிறப்பு வாய்த மற்றும் யுக்தி நிறைந்த கூட்டணி தொடர்ந்து வலிமையடைந்து வருகிறது. கடந்த சில தசாப்தங்களில் உலகம் பல்வேறு அடிப்படை மாற்றங்களைக் கண்டுள்ளது. வெவ்வெறு புவிசார் அரசியல் கூட்டணிகள் உருவெடுத்து வருகின்றன. ஆனால் இந்தியா - ரஷ்யா இடையேயான நட்பு தொடர்ந்து நிலையாக உள்ளது. இந்தியா - ரஷ்யா இடையேயான உறவு தனித்துவமானது மற்றும் நம்பகத்தன்மைகொண்ட நட்பாகும் என்றார்.