இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரை பலிகொண்ட ஹெலிகப்டர் விபத்தில் சிக்கிய நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட ஒரேயொருவரான கப்டன் வருண்சிங் உடல் நிலை தொடர்ந்தும் ஆபத்தான கட்டத்திலேயே உள்ளமாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு -நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகப்டர் நேற்று பிற்பகல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 இராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர்.
இந்த ஹெலிகப்டர் விபத்தில், 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்ட இராணுவ கப்டன் வருண்சிங் வெலிங்டன் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், அவரது உடல் நிலை தொடர்ந்தும் ஆபத்தான கட்டத்திலேயே உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தேவைப்பட்டால் வெலிங்டனில் இராணுவ மருத்துவமனையிலிருந்து பெங்களூரு இராணுவ மருத்துவமனைக்கு அவர் மாற்றப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த விபத்தில் சிக்கியவர்களில் உயிரோடு உள்ள ஒரேயொரு நபராக கப்டன் வருண்சிங் இருக்கும் நிலையில் அவர் பிழைத்துக்கொண்டால் இந்த ஹெலிகப்டர் விபத்து குறித்த முழு விபரங்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.