ஆயுதக் கிடங்குகள், வெடிமருந்து கிடங்குகள், விமானப் போக்குவரத்து மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட உக்ரைனின் முக்கிய இராணுவ உட்கட்டமைப்புகளை இலக்குவைத்து அழிக்கும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யப் படைகள் தங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து கட்டளைகளையும் நிறைவேற்றும். உக்ரைனில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கை திட்டமிடப்பட்டவாறு தொடர்கிறது என ரஷ்ய விமான நிறுவனங்களின் பெண் விமானக் குழுவினருடருடன் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் புடின் கூறினார்.
மேற்கத்திய நாடுகளின் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் குறித்து இதன்போது கருத்து வெளியிட்ட புடின், அவை போர் அறிவிப்புக்கு ஒத்ததாக இருப்பதாகக் கூறினார்.
ரஷ்யாவில் அவசர நிலையை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
உக்ரைனில் ஒரு விசேட இராணுவ நடவடிக்கையை தொடங்குவது என எடுக்கப்பட்ட முடிவு மிகக் கடினமானது. ஆனால் ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை சமாளிக்க இது தவிர்க்க முடியாததாகிவிட்டது எனவும் ஜனாதிபதி புடின் கூறினார்.
உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் இது மேற்கு நாடுகளின் அத்துமீறல்களுக்கு வழிவகுக்கும். அத்துடன், உக்ரைன் கிரிமியாவிற்குள் நுழையக்கூடும். இது ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையே நேரடி மோதல்களுக்கு வழிவகுக்கும் என புடின் எச்சரித்தார்.
இதேவேளை, உக்ரைனுடன் பேச்சுவார்த்தைகளை தொடரவும் தயாராக இருப்பதாகவும் புடின் மேலும் கூறினார்.