புளூட்டோனியத்தை அடிப்படையாகக் கொண்ட அணு ஆயுதத்தை (plutonium-based nuclear weapon) உருவாக்குவதற்கான செயற்பாடுகளை உக்ரைன் முன்னெடுத்து வருவதாக ரஷ்ய ஊடகங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளன.
எனினும் இந்தக் குற்றச்சாட்டை உறுதி செய்வதற்கான ஆதாரங்கள் எதனையும் அந்த ஊடகங்கள் வெளிப்படுத்தவில்லை.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பெப்ரவரி 24-ஆம் திகதி உக்ரைன் மீதான படையெடுப்புக்கு உத்தரவிட்டார். இதன் நோக்கம் உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதை தடுப்பதை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தது.
இந்த படையெடுப்பை தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது தீவிர பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. அத்துடன், உக்ரைனுக்கு ஆயுதங்கள், நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.
இவ்வாறான நிலையில் 2000 ஆம் ஆண்டு மூடப்பட்ட செர்னோபில் அணுமின் நிலையத்தில் உக்ரைன் அணு ஆயுதங்களை உருவாக்கி வருவதாக ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய ஊடகங்களான டாஸ் (TASS), ரியா (RIA) மற்றும் இன்டர்பாக்ஸ் (Interfax) செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனினும் அதற்கான வெளிப்படையான ஆதரங்களை வெளியிடவில்லை.
சோவியத் ஒன்றியம் உடைந்ததைத் தொடர்ந்து 1994 இல் அணு ஆயுதங்களை கைவிட்ட நிலையில் அணுசக்தி திட்டம் ஏதும் என்று உக்ரைன் அரசாங்கம் கூறியுள்ளது.
எனினும் சோவியத் அறிவை பயன்படுத்தி அணு ஆயுதங்களை உக்ரைன் உருவாக்குகிறது என உக்ரைன் மீதான படையெடுப்புக்கு உத்தரவிட சற்று முன்பான ரஷ்ய ஜனாதிபதி புடின் குற்றஞ்சாட்டியிருந்தார். இது ரஷ்யா மீதான தாக்குதலுக்கு தயார் செய்வதற்கு சமம் என்றும் அவா் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.