தென்னாபிரிக்காவில் உள்ள இரவு களியாட்ட விடுதி ஒன்றில் பதின்ம வயதினர் 22 பேர் மர்மமாக உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் பெரும்பாலானோர் 13 மற்றும் 14 வயதானவர்கள் என தெரியவருகிறது.
தெற்கு கடற்கரை நகரமான கிழக்கு லண்டனில் உள்ள இரவு கேளிக்கை விடுதி மற்றும் மதுபான விடுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 22 பதின்ம வயதினர் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர்கள் இறந்தது எவ்வாறு? என்பது குறித்து தென்னாப்பிரிக்க பொலிஸார் மற்றும் தடயவியல் குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.
பதின்ம வயதுக் குழுவினர் தமது பள்ளி ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி ஒழுங்கு செய்திருந்த களியாட்ட நிகழ்விலேயே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. அவர்கள் எவ்வாறு இறந்தனர்? என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இரவு விடுதியில் ஏதோவொரு அசம்பாவிதம் நடந்துள்ளதாக உள்ளூர்வாசிகள் அதிகாலை 4 மணியளவில் எச்சரிக்கையை எழுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
22 இளம் பராயத்தினர் இறந்து கிடக்கும் செய்தி அறிந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே அவர்களின் பெற்றோர், உறவினர் விடுதி முன்பு கோபத்துடன், திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் முயன்றனர்.
முதலில் நெரிசலால் மரணங்கள் சம்பவித்ததாக முதலில் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அங்குள்ள சூழ்நிலையை அவதானித்ததில் எந்த நெரிசலும் ஏற்படவில்லை என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இறப்புக்கான காரணத்தை நாங்கள் ஊகிக்க விரும்பவில்லை. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தை ஆராய்ந்து வருகின்றனர். உணவில் விஷம் இருந்ததா? போன்ற தகவல்களை விசாரணைகளின் பின்னரே தெரிவிக்க முடியும் எனவும் பொலிஸார் கூறினர்.
பிரேத பரிசோதனையில் இரவு விடுதியில் என்ன நடந்தது? என்பது பற்றிய தெளிவான தகவல்கள் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.