மத்திய உக்ரைன் கிரெமென்சுக் நகரில் (Kremenchuk) உள்ள வணிக வளாகம் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 59 பேர் காயமடைந்தனர்.
பரபரப்பான வணிக வளாகம் மீது திங்கள்கிழமை இரண்டு ரஷ்ய ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தன. இதன்போது வணிக வளாகத்தில் 1,000 க்கும் மேற்பட்டோர் இருந்ததாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.
ஏவுகணை தாக்குதலை அடுத்து வணிக வளாகத்தில் பெரும் தீ பரவல் ஏற்பட்டது. வானத்தை நோக்கி கரும் புகை எழுந்ததாக சம்பவ இடத்தில் இருந்த சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர். 59 பேர் காயமடைந்தனர் என்று உக்ரைன் அவசர சேவை துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
தாக்குதலைத் தொடர்ந்து அங்கு விரைந்த மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரஷ்யாவிடமிருந்து கண்ணியம் மற்றும் மனிதநேயத்தை எதிர்பார்ப்பது பயனற்றது என்பதை அப்பாவிகள் மீதான இந்தத் தாக்குதல் காட்டுவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்தலுக்கு முன்னர் கிரெமென்சுக் சுமார் 217,000 பேர் வசிக்கும் தொழில் நகரமாக இருந்தது. பொல்டாவா பகுதியில் டினிப்ரோ ஆற்றை அண்டி அமைந்துள்ள இந்த நகரம் உக்ரைனின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு தளமாகும்.
கிரெமென்சுக் நகரில் உள்ள வணிக வளாகம் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் கட்டட இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என மத்திய பொல்டாவா பிராந்தியத்தின் ஆளுநரான டிமிட்ரோ லுனின் தெரிவித்துள்ளார்.
இது உக்ரேனிய அப்பாவி மக்களுக்கு எதிரான ரஷ்யாவின் பயங்கரவாதச் செயல். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியின் அருகில் உக்ரைன் இராணுவ இலக்குகள் எவையும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.