உடல் நிலை பாதிக்கப்பட்டு நேற்று காலமான பிரபல சினிமா வசனகர்த்தாவும், நகைச்சுவை நடிகருமான கிரேஸி மோகனின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு கோலிவுட்டை சேர்ந்த நட்சத்திரங்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
பிரபல நகைச்சுவை நாடக நடிகர். வசனகர்த்தா என்று ரசிகர்கள் மத்தியில் கிரேஸி மோகனுக்கு இருந்த புகழ் அதிகம். இவர் கமலுடன் இணைந்து பணியாற்றி அனைத்து படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவை. முக்கியமாக வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நகைச்சுவை காட்சிகள் வெகுவாக பேசப்பட்டவை.
இவர் ஏராளமான நாடகங்களையும் மேடையேற்றி உள்ளார். பல விருதுகளும் வாங்கி குவித்த கிரேஸி மோகன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது உடல் சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அவரது உடலுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் காலை 9 மணியளவில் இறுதிச்சடங்குகள் நடந்தன. தொடர்ந்து கிரேஸி மோகனின் உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.