சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரை போற்று திரைப்படத்தின் பாடல் வெளியீடு உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக என்ற பெருமையுடன் வானில் பறந்தபடியே விமானத்தில் நாளை நடைபெறவுள்ளது
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூரரை போற்று திரைப்படத்தின் இரண்டாவது பாடலே இவ்வாறு பறக்கும் விமானத்தில் வெளியிடப்படவுள்ளது.
ஒரு விமானியின் வாழ்க்கை வரலாற்றை கற்பனை கலந்து இப்படத்தை எடுத்துள்ளார்கள். இந்த படத்தின் குறும் முன்னோட்டம் கடந்த மாதம் 7ம் திகதி வெளியாகி இப்படம் குறித்த எதிர்பார்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது.
தொடர்ந்து படத்தின் தீம் மியூசிக் ‘மாறா தீம்’ வெளியாகி எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியிருந்தது. அத்துடன் எதிர்வரும் 13 ம் திகதி ‘சூரரை போற்று’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நடக்கும் என்று இணையத்தளங்களில் வேகமாக பரவியிருந்தது.
இவ்வாறு எதிர்பார்பை எகிறவைத்த படக்குழுவினர் தற்போது புது தகவலை வெளியிட்டு ஒட்டுமொத்த உலகையுமே ஆச்சரியப்படுத்தியுள்ளார்கள்.
‘சூரரை போற்று’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலாக ‘வெய்யோன் சில்லி’ பாடலை நாளை ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் இருக்கும் போயிங்-737 வகை விமானத்தில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
அதுவும் முதல் முறையாக வானத்தில் பறந்தபடியே படத்தின் பாடல் வெளியீடு நடைபெறப்போவதாக அறிவித்துள்ளமை தமிழ் சினிமா கடந்து இந்திய சினிமாவை திரும்பிபார்க்க வைத்துள்ளது. அதுமாத்திரமல்லாது உலகில் முதல் முறையாக பறக்கும் விமானத்தில் நடக்கும் இசை வெளியீட்டு விழாவாகவும் அமைந்து கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை விமானத்தில் பறக்காத 100 மாணவர்களை ஏற்றிக் கொண்டு ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இதற்காக கட்டுரைப் போட்டிகள் நடாத்தி தேர்வு செய்யப்பட்டிருக்கும் 100 மாணவர்களை விமானத்தில் ஏற்றி அவர்களது முதல் விமான பறப்பு பரவசத்திற்கு நடுவே ‘சூரரை போற்று’ படத்தின் பாடல் நாளை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.