பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 1,417 போ் நேற்று உயிரிந்துள்ளனா். இது உலக அளவில் இதுவரை பதிவான மிக அதிக ஒரு நாள் இறப்பு எண்ணிக்கையாகும்.
இதன்மூலம் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்காவுக்கு அடுத்ததாக 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கையை கொண்ட நாடாக பிரான்ஸ் உள்ளது.
பிரான்ஸில் நேற்றிவு வரை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 328 ஆக பதிவானது.
மார்ச் 1 முதல் பிரெஞ்சு மருத்துவமனைகளில் 7,091 இறப்புகள் பதிவாகியுள்ளதாக பிரான்ஸ் பொது சுகாதார அமைப்பு தலைவர் ஜெரோம் சொலமன் கூறினார். மேலும் 3,237 பேர் முதியோருக்கான பராமரிப்பு இல்லங்களில் இறந்துள்ளனர் என அவா் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் தற்போது 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவா்களில் 7 ஆயிரத்து 131 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர் என சொலமன் மேலும் தெரிவித்தார்.
பாரிசில் கொரோனா வைரஸ் சமூக முடக்கல்களை பொதுமக்கள் மீறி வருவதால் நேற்று முதல் நடைபயிற்சிக்காக வீதிகளில் இறங்கவும் தடை விதிக்கப்பட்டது.
வீடுகளுக்கு வெளியிலான ஒவ்வொரு பயணங்களும் நோய்க்கு எதிரான போராட்டத்தின் தடைக்கற்களாக உள்ளன என பாரிஸ் மேயர் அன்னே ஹிடல்கோ மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரி டிடியர் லாலெமென்ட் நடைபயிற்சிக்கு தடை விதித்து நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனா்.
வீடுகளில் இருந்து வெளியேறும் எவரும் தமது பயணத்துக்கான நியாயமான காரணங்களை உறுதி செய்யும் ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூக முடக்கலால் பிரெஞ்சு மக்கள் கடினமான சூழலை எதிர்நோக்கியுள்ளதை நான் அறிவேன். ஆனால் இன்று நாம் அனுபவிக்கும் சூழ்நிலையை விட மோசமான சூழ்நிலை உருவாகமல் தடுக்க வேண்டுமெனில் இந்நடவடிக்கை அவசியம் என பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரான்ஸ் பிரதமர் எட்வார்ட் பிலிப் தெரிவித்தார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), பிரான்சு