கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு அவுஸ்திரேலிய அரசு வழங்கும் நிவாரணங்களை தற்காலிக விசாவில் உள்ளவா்கள் மற்றும் விசாவுக்கு காத்திருக்கும் புலம்பெயா்ந்தவா்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட 10 இலட்சத்துக்கு மேற்பட்டவர்களும் வழங்க வேண்டும் என சுமார் 200 சமூக அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டுமக்களுக்கு பொருளாதார ரீதியில் உதவி வழங்குவதற்கு முடிவெடுத்துள்ள அரசு, தற்காலிக விசாவில் உள்ளோா் மற்றும் புலம்பெயா்ந்தவா்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவா்களைத் தவிர்ப்பது நியாயமாகாது என்று இந்த அமைப்புக்கள் கையெழுத்திட்டு பிரதமருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவித்திருக்கின்றன.
மேலும் - அவுஸ்திரேலியா உட்பட உலகமெங்கும் பரவி வருகின்ற கொரோனா தொற்றானது இன்று பொதுவான பாடமொன்றை எல்லோருக்கும் புகட்டியிருக்கிறது. அதாவது, தேவைகளோடு அங்கலாய்த்துக்கொண்டிருக்கும் சமூகமொன்றை நாங்கள் எவ்வாறு கையாளுகிறோம்? அதற்கான பொறிமுறைகளை நாங்கள் எவ்வாறு உருவாக்கிக்கொள்கிறோம்? என்பது இந்த மாதிரியான சூழ்நிலையில் மிகவும் முக்கியமானது. பொறுப்புள்ள அரசுகள் இந்த விடயத்தில் தப்பிக்கொள்ள முயற்சிக்கக்கூடாது.
சவுதி, கட்டார் போன்ற நாடுகளில் வெளிநாட்டு தொழிலாளர்கள் போதிய வசதிகளின்றி ஒரே இடத்தில் பெருமளவானவர்கள் வசித்து வந்ததால் அந்த நாடுகளில் நோய்த்தொற்று பெருகுவதற்கு காரணமாக இருந்திருக்கிறது. இதனை படிப்பினையாகக் கொண்டு அவுஸ்திரேலிய அரசு செயற்படவேண்டும்.
தற்காலிக விசாவில் உள்ளவர்கள் மற்றும் புலம்பெயா்ந்தவா்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவா்கள் மருத்துவ வசதிகளோ திடமான வருமானங்களோ இல்லாமல் தற்போதைய நோய்த்தொற்றுக்காலத்தில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த நாட்டில் தஞ்சம்கோரியுள்ள இவர்கள் அரசாங்கம் விடுத்துவருகின்ற தனிமைப்படுத்தும் அறிவித்தல்கள் மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றவேண்டியவர்களாகவும் அதேவேளை தனிவாழ்வில் போராட வேண்டியவர்களாகவும் உள்ளார்கள்.
இவர்களுக்கான நிதியாதாரங்களை உறுதிப்படுத்தவது அவுஸ்திரேலிய அரசின் கடமையாகும் எனவும் 200-க்கும் மேற்பட்ட அமைப்புக்கள் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), ஆஸ்திரேலியா