Friday 26th of April 2024 02:59:31 PM GMT

LANGUAGE - TAMIL
இந்தியன்-2
இந்தியன்-2 எடிட்டிங் பணிகள் தொடங்கியது: படம் குறித்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி!

இந்தியன்-2 எடிட்டிங் பணிகள் தொடங்கியது: படம் குறித்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி!


லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமல் நடிக்கும் இந்தியன்-2 திரைப்படத்தின் எடிட்டிங் பணிகள் தொடங்கியதன் மூலம் அப்படம் குறித்து வெளியாகிவந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

'இந்தியன்-2' படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் என ஒவ்வொருவராக மாறிக் கொண்டே இருந்தார்கள். இதனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடைபெறவில்லை. படப்பிடிப்பு தொடங்கப்பட்டவுடன் கமலுக்கு போடப்பட்ட மேக்கப்பை அவர் ஏற்கவில்லை. இதனால் சில காலம் ஒய்வுக்குப் பிறகு கமல் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். மேக்கப் பிரச்சினை முடிவுக்கு வந்தது.

சில காலங்களுக்கு முன்பு காலில் செய்த அறுவை சிகிச்சையில் வலி அதிகமாகவே மீண்டும் அறுவை சிகிச்சை செய்தார் கமல். அப்போது சில காலம் படப்பிடிப்பு தடைப்பட்டது. அனைத்தும் சரியாகி படப்பிடிப்பு தொடங்கிய சமயத்தில் கிரேன் அறுந்து விழுந்து படக்குழுவைச் சேர்ந்த பணியாளர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறக்க, 9 பேருக்குக் காயம் ஏற்பட்டது.

கமல் - ஷங்கர் இணைப்பில் உருவாகும் படம் என்பதால், இந்த விபத்து இந்தியத் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணை இன்னும் முடிவு பெறவில்லை. இந்த விபத்தினால் லைகா நிறுவனம் - கமல் இருவருக்கும் அறிக்கைப் போர் ஏற்பட்டது. இதனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கப்படுமா என்று கேள்வி எழுந்தது.

அடுத்ததாக கரோனா ஊரடங்கினால் ஒட்டுமொத்தப் பணிகளும் பாதிக்கப்பட்டன. இதனிடையே சில வாரங்களுக்கு முன்பு, 'இந்தியன்-2' படத்தை கைவிட்டு விட்டார்கள் என்று தகவல் பரவியது. கரோனா நெருக்கடியால் இங்கிலாந்தில் உள்ள லைகா நிறுவனத்தின் வியாபாரங்களில் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஆகையால் அவர்களால் மீண்டும் சினிமாவில் முதலீடு செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டார்கள்.

பெரும் முதலீடு செய்யப்பட்டதால் இதற்கு வாய்ப்பில்லை என்று தமிழ்த் திரையுலகின் வர்த்தக நிபுணர்கள் தெரிவித்தார்கள். அவ்வாறே இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தவுடனே, 'இந்தியன்-2' படத்தின் எடிட்டிங் பணிகளை படக்குழு தொடங்கிவிட்டது. இரண்டு இடங்களில் இதன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளே, இரண்டு படங்களுக்கான அளவில் இருப்பதால் அவற்றைச் சுருக்கி வருகிறது படக்குழு. கொரோனா ஊரடங்கு முடிவதற்குள் அந்தப் பணிகளை முழுமையாக முடிக்கத் திட்டமிட்டுள்ளது. படப்பிடிப்புக்கும் தமிழக அரசு அனுமதி கிடைத்தவுடன் தொடங்கப்படும் என்கிறார்கள் படக்குழுவினருக்கு நெருக்கமானவர்கள்.

ஈவிபி அரங்கில்தான் 'இந்தியன்-2' படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டது. ஆகையால், அங்கிருந்து அரங்குகள் அனைத்தையும் பல்லாவரம் அருகில் உள்ள பின்னி மில்லுக்கு மாற்றிவிட்டது படக்குழு. அடுத்தகட்டப் படப்பிடிப்பு அங்குதான் தொடங்கவுள்ளது. 'இந்தியன்-2' படத்தை திரைக்குக் கொண்டுவருவதில் அனைவருமே தீவிரமாகப் பணிபுரிந்து வருவது தெளிவாகியுள்ளது.

இந்தப் பணிகள் எல்லாம் தொடங்கிவிட்டதன் மூலமாகவே, தங்களுடைய படத்தைச் சுற்றி வலம்வரும் வதந்திகள், சர்ச்சைகள் என அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது 'இந்தியன்-2' படக்குழு.


Category: சினிமா, புதிது
Tags: தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE