உலக நாயகன் கமல் மற்றும் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்து பெரு வெற்றி பெற்ற தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் தலைவன் இருக்கிறான் திரைப்படத்தில் கமலுடன் விஜய்சேதுபதி இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கதாநாயகனாக பெயர் வாங்கிய விஜய் சேதுபதி மற்ற நடிகர்கள் படங்களிலும் இமேஜ் பார்க்காமல் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடிக்கிறார். மாதவனின் விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட படங்களில் வில்லனாக வந்தார். ஓ மை கடவுளே, தெலுங்கில் சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படங்களில் சிறிய கதாபாத்திரங்களை ஏற்றார். தற்போது விஜயின் மாஸ்டர் படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.
அடுத்ததாக விஜய் சேதுபதி, தேவர் மகன் இரண்டாம் பாகமாக தயாராகும் கமலின் தலைவன் இருக்கின்றான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் அது என்ன கதாபாத்திரம் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நாசரின் மகனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தேவர் மகன் பட கதைப்படி நாசர் இறந்துவிட்ட நிலையில், இரண்டாம் பாகத்தில், அவரது மகனாக நடிக்கும் விஜய் சேதுபதி, கமலை பழிவாங்க துடிப்பது போல கதை அமைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.