கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்துச் செல்வதற்கு இந்திய அரசின் ஏற்பாட்டில் இரு விமானங்கள் வரும் நாட்களில் கொழும்பிற்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் 'வந்தே பாரத் மிஷன்' திட்டத்தின் மூன்றாம் கட்டமாக இந்த விமான பயணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் இத்தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜூன்-15, 2020 அன்று ஏஐ 1202 என்ற இலக்கமுடைய விசேட விமானம் கொழும்பில் இருந்து பெங்களூரிற்கும், ஜூன் 22, 2020 அன்று ஏஐ 0282 என்ற இலக்கமுடைய விசேட விமானம் கொழும்பில் இருந்து டெல்லி-லக்னோ-கயா ஆகிய இடங்களுக்கும் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் பெற்ற பதிவுகளின் அடிப்படையில் குறித்த விசேட விமானங்களில் நாடு திரும்புவதற்கு நபர்கள் தெரிவு செய்யப்படவுள்ளார்கள். நாடு திரும்புவதற்கு பலர் விண்ணப்பித்திருந்தாலும் அவசரமாக நாடுதிரும்ப வேண்டியவர்களே முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர இவ்விசேட விமானத்தில் பயணிப்பதற்கான கட்டணம் மற்றும் நாடு திரும்பியதும் மேற்கொள்ளப்படும் தனிமைப்படுத்தல் செயற்பாட்டிற்கான செலவு என்பவற்றை நாடு திரும்புவர்களே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு திரும்புவர்கள் செல்லவிருக்கும் மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படும் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளின் அடிப்படையில் விசேட விமானத்தில் திரும்புவர்கள் உள்வாங்கப்படுவார்கள் எனவும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா