இன்று எதிர்க்கட்சியே இல்லாத நிலையில் தற்போதைய அரசாங்கம் 20வருடத்திற்கு மேல் நிலைத்திருக்கும் என தெரிவித்த தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழர்கள் அரசுடன் இணைந்து பயணிக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று மட்டக்களப்பு, கல்லடியில் நடைபெற்றது.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.
திருமதி வித்தியாபதி முரளிதரன் தலைமையில் எட்டு வேட்பாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த முரளிதரன், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கடந்த மாகாணசபையில் முஸ்லிம்களிடம் கொண்டு தமிழர்களை அடகுவைத்தார்கள். இவர்களினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதுவித அபிவிருத்திகளும் முன்னெடுக்கமுடியாது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட்டுள்ளவர்களில் பலர் வட்டிக்கு காசுகொடுத்து அவர்களினால் பல பெண்கள் தற்கொலைசெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவர்களினால் மக்களுக்கு எந்த சேவையினையும் ஆற்றமுடியாது.