மாகாண சபை முறைமையை முற்றாக ஒழித்து அதிகாரப் பகிர்வையும் இல்லாது செய்யும் வகையிலான புதிய அரசமைப்பு உருவாக்கத்தை கோட்டா முன்னெடுக்க வேண்டும் என குணதாச அமரசேகர வலியுறுத்தியுள்ளார்.
"மாகாண சபை முறைமையை முற்றாக நீக்கி அதிகாரப் பகிர்வு கோட்பாட்டை இல்லாது செய்யும் வகையிலேயே புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். புதிய அரசமைப்பை உருவாக்கும் பணியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது கையில் எடுக்கவேண்டும்."
- இவ்வாறு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.
தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டம் சம்பந்தமாக தமிழ் அரசியல்வாதிகளால் விடுக்கப்பட்டுவரும் அறிவிப்புகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"பிரபாகரனைப் பயன்படுத்தி தனி ஈழத்தைப் பெற்றுக் கொள்வதற்கு அன்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தத் திட்டம் கைகூடாத நிலையிலேயே புதிய அரசமைப்பின் ஊடாக அந்த இலக்கை அடைவதற்கு தமிழ்க் கூட்டமைப்பு பாடுபட்டு வருகின்றது. இதன் ஓர் அங்கமாகவே பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வதற்கு அக்கட்சி முயற்சிக்கின்றது. எனவே, கூட்டமைப்பின் அணுகுமுறைகள் தொடர்பில் அரசு விழிப்பாகவே இருக்கவேண்டும்.
அதிகாரப்பகிர்வு அவசியமில்லை. மாகாண சபைகள் முறைமை நீக்கப்படவேண்டும் என கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. அதனை நானும் வரவேற்கின்றேன். புதிய அரசமைப்பின் ஊடாக இவ்விடயம் செய்யப்படவேண்டும். ஒற்றையாட்சியை பலப்படுத்தவேண்டும்.
அதேபோல் புதிய அரசமைப்பை உருவாக்கும் பொறுப்பை நாடாளுமன்றத்திடம் மாத்திரம் ஒப்படைக்காமல் புத்திஜீவிகளிடமும் அதற்கான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி வழங்கவேண்டும்.
ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பின் கீழ்தான் பணிகள் இடம்பெறவேண்டும். கடந்த ஆட்சியின்போது நாட்டைப் பிளவுபடுத்தும் வகையிலேயே அரசமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது" - என்றார்.