தன்னாட்சிப் பிராந்தியமான ஹொங்கொங்கைக் கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமுலாக்கியுள்ளதைத் தொடா்ந்து ஹொங்கொங் உடனான ஒப்படைப்பு ஒப்பந்தத்தத்திலிருந்து இடைவிலகுவதாக அவுஸ்திரேலியா பிரதமர் ஸ்கொட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சீனாவின் நடவடிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் ஹொங்கொங் வாசிகள் அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதாற்காக விசா காலத்தை இன்று வியாழக்கிழமை முதல் 2 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிப்பதாகவும் அவா் அறிவித்தாா்.
இந்த விசா நீடிப்பி்ன் இறுதியில் அவா்கள் நிரந்தர வதிவிட விசாக்களை பெறுவதற்கான தகுதியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவா் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் எத்தனை ஹொஹ்கொங்கியாள்ர் விசா நீடிப்புகளைப் பெறுவார்கள் என்பது குறித்து தெளிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
ஏற்கனவே சுமாா் 30 இலட்சம் ஹொஹ்கொங் வாசிகளுக்கு வெளிநாடு வாழ் பிரித்தானியா்கள் என்ற திட்டத்தின் கீழ் கடவுச் சீட்டுக்களை வழங்கவுள்ளதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. இந்தக் கடவுச் சீட்டைப் பெறுவோா் 5 ஆண்டுகள் பிரிட்டனில் தங்கியிருக்கவும் வேலை செய்யவும் தகுதி பெறுவாா். தொடா்ந்து நிரந்தர வதிவிட உரிமையை பெற்றுக்கொள்ளவும் இது வழியேற்படுத்துகிறது.
இதேவேளை, கனடாவும் ஹொங்கொங்குடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்கள் குறித்து நம்பிக்கை இழந்துள்ளது. ஹொங்கொங் வாசிகளுக்கு அடைக்கலம் வழங்குவது உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கனடா ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.