பிரிட்டன் - ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசி மனிதர்களின் உடலில் பாரிய பக்க விளைவுகளை ஏற்படுத்தாது, கொரோனா வைரஸூக்கு எதிரான நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுகிறது என அதன் முதல் சுற்று மனிதப் பரிசோதனையின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியின் ஆய்வகப் பரிசோதனைகளை முடித்து, மனிதர்களிடம் பரிசோதனைகள் முன்னெடுப்பட்டு வரும் நிலையிலேயே இது குறித்த நம்பிக்கையளிக்கும் முடிவு வெளியாகியுள்ளது.
எனினும் பரிசோதனையின் அடுத்தடுத்த கட்டங்களின் பின்னரே இந்தத் தடுப்பூசி மனிதப் பயன்பாட்டுக்கு உகந்ததா? என்பது முடிவு செய்யப்படும்.
முதல் சுற்று மனிதப் பரிசோதனையில் 1,077 பேருக்கு இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனை இடம்பெற்றது. இதன் முடிவில் இந்த தடுப்பு மருந்து இரத்தத்தில் வெள்ளை அணுக்களை அதிகரிப்பதுடன், கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை மனிதர்களின் உடலில் தூண்டுவதும் தெரியவந்துள்ளது.
இந்த தடுப்பூசியில் குறிப்பிடத்தக்க பக்க விளைவாக மருந்தை எடுத்தக்கொண்ட 70 வீதமானவர்களுக்கு தலைவலி ஏற்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனைவிட பாரிய பக்க விளைவுகள் எதுவும் காணப்படவில்லை.
தலைவலி போன்ற சிறிய பக்க விளைவுகளை பரசிற்றமோல் கொண்டு சமாளிக்க முடியும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
எனினும் இந்த கொரோனா தடுப்பூசியை பொதுப் பாவனைக்கு அறிமுகப்படுத்த முன்பு இன்னும் நிறைய பணிகள் உள்ளன என ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் சாரா கில்பேர்ட் தெரிவித்துள்ளார்.
இந்தத் தடுப்பூசி ஆரம்பகட்ட முடிவுகள் நம்பிக்கையளிப்பதாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து